7/10/09

Tamil statements

Statement #1
கோ சூ கூன் தவறுகளை ஒப்புக்கொண்டு, அவற்றை சரி செய்ய முன்வர வேண்டும்!!

பினாங்கு மாநில முன்னாள் முதலமைச்சரும், இந்நாள் பிரதமர் துறையின் அமைச்சருமான கோ சூ கூன் பினாங்கு மக்களின் மீது தனக்கு சிறிதும் அக்கறையில்லை என்பதை மீண்டும் ஒருமுறை தனது பேச்சுகளாலும், செயல்களினாலும் நிருபித்திருக்கிறார். ஏறக்குறைய சுமார் இருபது ஆண்டுகள் பினாங்கு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்திருந்தாலும், பினாங்கு மக்களின் மீது தனக்கு அறவே அக்கறையில்லை என்பதைத்தான் அவரது அண்மைய அறிக்கைகள் காட்டுகின்றன.

கம்போங் புவா பாலா விவகாரத்தில், தொடர்ச்சியாக தற்போதைய பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசின் மீது சேற்றை அள்ளி வீசும் வண்ணத்திலான கருத்துகளை வெளியிடுவதிலிருந்தே அவரின் உண்மையான நோக்கம் புரிகிறது. ஒரு பினாங்கு குடிமகன் என்ற விதத்திலும், பினாங்கு மாநிலத்தில் சுமார் இருபது ஆண்டுகள் ஆட்சி புரிந்த முதல்வர் என்ற முறையிலோ, கோ சூ கூன் ஒரு ஆக்ககரமான முடிவை எற்படுத்தித்தர முயற்சிகள் எடுக்கவில்லை. கோ சூ கூன், பினாங்கு மாநிலத்தில், முன்னாள் கெராக்கான் – தேசிய முன்னணி அரசு விட்டுச்சென்றுள்ள தவறுகளை மறைக்க முயல்வதோடு மட்டுமல்லாமல், அந்த தவறுகளை திருத்த, உதவவும் மறுக்கிறார்.

கம்போங் புவா பாலா விவகாரத்தில், முன்னாள் தேசிய முன்னணி அரசு செய்த தவறுகளை ஏற்றுக்கொள்ள மறுப்பதோடு மட்டுமல்லாமல், முன்னாள் தேசிய முன்னணி அரசு செய்த தவறுகளை மக்கள் கூட்டணியே திருத்திக் கொள்ளட்டும் என்ற வாக்கில் செயல்படுகிறார் கோ சூ கூன். தனது ஆட்சிக்காலத்தில், பினாங்கு மாநிலத்தில் பல்வேறான நில ஊழல்கள் சம்பந்தமாக விளக்கங்களை அளிக்காமல், தொடர்ச்சியாக மக்கள் கூட்டணியின் மீது சேற்றை வாரி இறைப்பது கடும் கண்டனத்திற்குரிய செயலாகும்.

பினாங்கு மாநிலத்தில் நிகழ்ந்த மற்றுமொரு நில ஊழலில், முன்னாள் தேசிய முன்னணி அரசு செய்த தவற்றால் ஏற்பட்ட சுமார் 40 மில்லியன் நிதிச்சுமைக்கு, முன்னாள் தேசிய முன்னணி அரசின் ஆட்சிக்குழு உறுப்பினரில் ஒருவரான டாக்டர் ஹில்மீ யஹ்யா தவறுகள் நிகழ்ந்துள்ளதை ஒப்புக்கொண்டதைப் போல், கோ சூ கூன் தவறுகளை ஒப்புக்கொள்ள முன்வர வேண்டும்.

முன்னாள் தேசிய முன்னணி இழைத்த தவறுகளை மூடி மறைப்பதில் முனைப்பு காட்டும் கோ சூ கூன், தனது ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்து விட்ட இந்த தவறுகளை திருத்துவதற்கும் முனைப்பு காட்ட வேண்டும். தற்போதைய மாநில அரசோடு இணைந்து செயல்படுவதன் மூலமே இந்த பிரச்சனையை தீர்க்க முடியும் என்பதை உணர்ந்து, பிரதமர் நஜிப்பிற்கு அழுத்தம் தந்து கம்போங் புவா பாலா மக்களின் பிரச்சனையைத் தீர்க்க கோ சூ கூன் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.


Statement #2

கம்போங் புவா பாலா கற்றுத்தரும் பாடங்களும், வாய்ப்புகளும்!!

கம்போங் புவா பாலா பிரச்சனை திடிரென்று பெரிதாக வெடித்திருக்கின்றது. கம்போங் புவா பாலா பிரச்சனையை திடிரென்று ஏற்பட்டுள்ள வெறும் குழப்ப நிலை என்று மட்டும் பார்க்காமல், வருங்காலத்தில் இது போன்ற குழப்ப நிலைகள் ஏற்படாமிலிருக்க எவ்வாறன அனுகுமுறைகளை கடைப்பிடிக்கலாம் என்று ஆரய்வதுதான் சிறந்தது. மாநில, மத்திய அரசுக்களின் நிலம் மற்றும் வீட்டுடமைகளைப் பற்றிய சட்டங்களில் தென்படும் பலவீனங்களை சரி செய்வது எப்படி என்ற ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்.

நில கையகப்படுத்தும் சூழ்நிலைகள் ஏற்படுகையில், சம்பந்தப்பட்ட நிலத்தில் வீடுகள் கட்டி குடியிருந்து வரும் மக்களின் கருத்துகள் கண்டறியப்பட வேண்டும். அதே வேளையில், அரசு நிலத்தை கையகப்படுத்தும் சூழ்நிலையில், அந்நிலத்தின் விலையை உறுதிப்படுத்துவதற்கு, சில குறிப்பிட்ட வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். அரசு நில விற்பனையில் குறிப்பிட்ட வழிமுறைகள் பின்பற்றப்படும்போது, அரசு நிலமானது, மிகக் குறைந்த விலையில் விலைபோவதையும், நில விற்பனைகளில் ஏற்படும் அரசியல் தலையீடுகளையும் தவிர்க்க முடியும். தற்போதுள்ள மாநில, மத்திய சட்ட வரைவுகளில், நிலத்தில் குடியிருப்பவர்களின் உரிமைகள் தற்காக்கப்படுவதில்லை, இந்த நிலையின் காரணமாகவே, பல வேளைகளில் நியாயமற்ற நிலையில் பல குடியிருப்புகள் உடைக்கப்படுகின்றன; உடைத்தப்பிறகு இழப்பீடும் மறுக்கப்படுகிறது.

பாரம்பரிய, கலாச்சார கட்டடங்களை அல்லது இடங்களை தற்காப்பதற்கு போதுமான சட்ட வரைவுகள் இதுநாள் வரையில் இல்லை, அப்படி சட்ட வரைவுகள் இருந்தாலும் அது செயல்திறனற்ற ஒன்றாகவே இருந்து வருகிறது என்பதுதான் உணமை. ஒரு இடம் மேம்பாட்டிர்கு எடுத்துக்கொள்ளப்படும் போது, பாரம்பரிய, சரித்திர கட்டடங்களையும், இடங்களையும் தற்காப்பதற்கு மட்டுமல்லாமல், ஒரு இனத்தின், நாட்டின் கலாச்சார, சரித்திர, பாரம்பரியத்தின் நாடித்துடிப்பை தற்காக்கவும் சட்ட வரைவுகள் அவசியாமக இருக்க வேண்டும்.

சட்ட வரைவுகள், குறிப்பிட்ட வழிமுறைகளை தவிர்த்து, குடியிருப்பாளர்களின் உரிமைகளை, குறிப்பாக, சொந்த வீடு வாங்க முடியாமல், அரசாங்க நிலங்களிலோ, தனியார் நிலங்களிலோ குடியிருப்புகளை அமைத்து வாழ்ந்து வரும் ஏழை மக்களின் நலன்களை பாதுகாக்க அரசியல் கரிசனை இருக்க வேண்டும். அரசாங்கம், இதுபோன்ற ஏழை, எளியவர்களின் குடியிருப்பிற்காக தரமான, குறைந்த விலை வீடுகளை கட்டும் அதிகமான திட்டங்களை அறிமுகம் செய்ய வேண்டும். ஏழை மக்களை சார்ந்த நிலம் மற்றும் குடியிருப்பு பிரச்சனைகள் ஆத்மார்த்தமான நடவடிக்கைகளின் மூலமே தீர்க்கப்படும் என்பதை அனைத்துத் தரப்பினரும் புரிந்துக் கொள்ள வேண்டும்.

கம்போங் புவா பாலா நிகழ்வுகள், பினாங்கு மாநில அரசுக்கு மட்டுமின்றி மலேசியாவிலுள்ள மற்ற மாநில அரசுகளுக்கும், குறிப்பாக மத்திய அரசுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். அரசியல், இன வேறுபாடுகளை கருத்தில் எடுத்துக்கொள்ளாமல், நமது நாட்டு சட்ட வரைவுகளிலும், இவ்வாறான பிரச்சனைகளை கையாளும் வழிமுறைகளிலும் தென்படும் பலவீனங்களை சரி செய்வதற்கான அனுபவமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

பிரதமர் துறையில் அமைச்சராக இருக்கும் கோ சூ கூன், இந்த நிலம் மற்றும் குடியிருப்பு சார்ந்த சட்ட மறுவரைவுகளில் முக்கிய பங்காற்ற முடியும். குறிப்பிட்ட சட்ட மறுவரைவுகளை மேற்கொள்ள பிரதம்ர நஜிப்பீற்கு கோ சூ கூன் ஆலோசனகள் வழங்க வேண்டும். 50 வருட தேசிய முன்னணி அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் வரையப்பட்ட சட்டத்திட்டங்களிலும், மக்கள் மீது அக்கறையில்லாமல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் தற்காத்துப் பேசிக்கொண்டிருப்பதை விடுத்து சில ஆக்ககரமான நடவடிக்கைகளில் தேசிய முன்னணி அரசாங்கம் இறங்க வேண்டும். உடனடியாக, நிலம் மற்றும் குடியிருப்புகள் சம்பந்தமான சட்ட மறுவரைவுகளை தேசிய முன்னணி அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். அரசியல் இலாபத்திற்காக பக்க சார்பான, நியாயமில்லாத சட்டங்களை தற்காத்துக் கொண்டிருக்கக் கூடாது.

No comments: